அருள்மிகு திரியம்பகேஸ்வரர் திருக்கோயில்
பிரம்மகிரியில் கவுதமர் என்ற மகா தவசியும் முனிவருமானவர், தமது
மனைவி அகல்யாவுடன் தபோவனம் அமைத்துத் தவம் செய்துவந்தார்.
அவரது தவவலிமையால் பிரம்மகிரிப் பகுதியில் மழை பெய்து செழிப்பாக
இருந்தது. மற்றப்பகுதிகளில் மழையில்லாமல் பஞ்சம் ஏற்பட்டு குடிப்பதற்குக்
குடிநீர் கூடக் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். இதனால் தமது தினசரிப்
பூஜைகளைச் செய்ய முடியாத பல முனிவர்கள் வேறு இடங்களிலிருந்து
இங்கு வந்து குடியேறினார்கள். தம் குடும்பத்துடன் வந்து முனிவர்களை,
கவுதமரும் அன்புடன் வரவேற்று அப்பகுதியில் தபோவனம் அமைத்து நன்கு
வாழ வைத்தார். காலம் செல்லச் செல்ல ஒருசில முனிவர்கள் கவுதமர் மீது
பொறாமை கொண்டனர். அவரது தவ வலிமையைக் குறைக்க வேண்டும்.
அவரை எப்படியாவது இப்பகுதியினின்றும் விரட்டி விட வேண்டும் என
எண்ணினர். அதில் ஒரு முனிவருக்கு விநாயகரை வரவழைக்கும் மந்திரம்
தெரியும். எனவே எல்லோரும் ஒன்று சேர்ந்து யாகம் செய்து, விநாயகரை
வரவழைத்துத் தங்களது வேண்டுதலைக் கூறினார்கள். விநாயகர்
முனிவர்களது எண்ணம் தவறானது என்றும், அதனால் தீங்கு ஏற்படும் என
அறிவுரை கூறிச் சென்று விட்டார். முனிவர்கள் விடுவதாக இல்லை. பார்வதி
தேவியின் தோழிகளில் ஒருவரான ஜெயா என்ற வன தேவதையை
வரவழைத்து, ஒரு பசுவாக உருவெடுத்து கவுதமமுனிவர் ஆசிரமத்
தோட்டத்தில்மேயும்படிச் செய்தனர். தோட்டத்தில் ஒரு பசு மேய்வதைக்
கண்ட கவுதமமுனிவர் தர்ப்பைப் புல்லால் பசுவை விரட்டினார். மாயப்
பசுவானதால் பசு இறந்தது போல் நடித்துப் படுத்துக் கிடந்தது. மற்ற
முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, கவுதம முனிவர் மேல் பசுவைக்
கொன்றதாகக் குற்றம் சாட்டினர். பசுவைக்கொன்ற தோஷம் நீங்க பிரம்மகிரி
மலையை 108 முறை சுற்றி வரவேண்டும் எனவும், 1008 லிங்கங்கள் வைத்துப்
கிரியைப் சுற்றப் போதுமான வலிமையில்லாமையினால் கவுதமர், 1008
மண்லிங்கங்களை வைத்து விரதமிருந்து சிவபெருமானை வைத்து
வழிபட்டார். கடும் தவம் மேற்கொண்டார். சிவபெருமான் குற்றமற்ற கவுதம
முனிவர்முன் தோன்றினார். தீயமுனிவர்கள் எண்ணம் தவறு என்றும்,
கவுதமருக்குப் பசுவைக் கொன்ற தோஷம் இல்லை என்றும் கூறினார்.
கவுதமரும் மகிழ்ந்து ஈசனிடம் தீய முனிவர்களின் தீய எண்ணம் மறையவும்,
அவர்கள் செய்த தவறின் தோஷம் அவர்களை விட்டு நீங்கவும், நாடு
செழிப்பாக ஆகி மக்கள் பஞ்சமின்றி வாழவும் அருள் புரிய வேண்டும் எனவும்
வரம் கேட்டார். சிவபெருமான் தமது ஜடாமுடியினின்றும் சிறிது
கங்காதீர்த்தம் வரவழைத்துக் கவுதமரிடம் கொடுத்துச் சென்றார்.
சிவபெருமான் கொடுத்த நீரே ஆறாகப் பெருகி ஓடியது. அதுவே கோதாவரி
அல்லது கவுதம நதி என்று கவுதமரின் பெயரால் தற்போது விளங்குகிறது.
அந்தக் கோதாவரி நதி நீரில் மூழ்கி கவுதமர் தாம் இழந்த தபோ பலமெல்லாம்
பெற்றார். தீய முனிவர்களையும் அவர்கள் தோஷம் நீங்க நீராடக் கூறினார்.
ஆனால் கோதாவரி நதி நீர் மறைந்துவிட்டது. கவுதமர் மீண்டும்
தர்ப்பைப்புல்லைத் தக்க மந்திர உபதேசம் செய்து மறைந்த கோதாவரி நீர்
குசாவர்த்தகம் என்னும் இடத்தில் தோன்றச்செய்து, தீய முனிவர்களை அதில்
நீராட வைத்து அவர்கள் தோஷம் நீங்கச் செய்தார். அதன்பிறகு நாடு செழித்து
நாட்டு மக்கள் பஞ்சமின்றி வாழ, கோதாவரி நதியாக நாட்டில் ஓடச் செய்தார்.
அதன்படியே இன்றும் பிரம்மகிரியில் உற்பத்தி ஆகும் கோதாவரி, முதலில்
ல மர வேரிலிருந்து தோன்றி, மலைக்குள் சிறு தொட்டியில் நிறைந்து, பின்
மீண்டும் மறைந்து குசாவர்த்தம் என்னும் குளத்தில் வெளிப்படுகிறது. பின்பு
கோதாவரி நதியாகத் திரியம்பகேசுவரர் கோயில் முன்பு கோடி தீர்த்தமாக
உருவெடுத்து, இன்றும் ஓடுகிறது.
இந்தக் கதையே வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. போதிய மழை
இல்லாமையால், உலகத்தின் நன்மையின் பொருட்டு கவுதம முனிவர், தம்
மனைவி அகல்யையுடன் பிரம்மகிரியில் கடுந்தவம் செய்தார். வருணன்
கட்டளைப்படி ஒரு குளத்தை உருவாக்கினார். வருணனின் அருளால், அந்தக்
குளத்தில் வற்றாமல் நீர் சுரந்தது. நீர் வளம் மிகுந்து அவருடைய ஆசிரமம்
செழிக்கத் தொடங்கியது. மற்ற முனிவர்களும் தம் தம் பத்தினிகளுடன் இங்கே
வந்து தங்கினர். சில நாட்களில் ரிஷி பத்தினிகளுக்குள் விரோதம்
உண்டாயிற்று. அகல்யையின் கர்வத்தை அடக்க, அவளை இந்த இடத்தை
விட்டே துரத்த வேண்டும் என்று மற்ற ரிஷிபத்தினிகள் தீர்மானித்து,
விநாயகரின் நியாயத்தை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. பசு
உருத் தாங்கிய விநாயகர், கவுதமர் பயிரிட்டிருந்த செடிகளைப் போய்
மேய்ந்தார். பசுவைத் துரத்தக் கோலுடன் கவுதமர் ஓடியதுமே, அந்த மாயப் பசு
உயிர் துறந்தது. அதனால் பசுவதை செய்த தோஷம் ஏற்பட்டு விட்டதாக மற்ற
முனிவர்கள் கூறினார்கள். இந்த தோஷம் நீங்க, பிரம்ம கிரியை 101 முறை
வலம் வரவேண்டுமென்றும், ஒரு கோடி மண் லிங்கங்களைப் பிடித்து
வணங்க வேண்டுமென்றும், கங்கையை இந்த இடத்துக்கு வரவழைக்க,
வேண்டுமென்றும், அந்த முனிவர்கள் கூறினார்கள். கவுதமரும் கடுந்தவம்
இயற்றத் தொடங்கினார். அவருடைய தவத்துக்கு இரங்கி, சிவபெருமான்
தரிசனம் அளித்தார். ரிஷி பத்தினிகளின் கெட்ட எண்ணத்தைக் கூற, தோஷம்
எதுவும் கிடையாது என்றும் சொன்னார். தம் சடை முடியிலிருந்து சிறிதளவு
கங்கா நீரையும் கொடுத்தார். அந்த நீரைப் பிரம்மகிரியில் வளர்ந்திருந்த பெரிய
அத்தி மரத்தின் வேரில் விட்டார் கவுதமர். கங்கை பெருகத் தொடங்கிற்று.
கவுதமர் இந்த நதியைக் கொண்டு வந்தமையால் கோதாவரி அல்லது கவுதமி
என்று அழைக்கப்படுகிறது. தம்மிடமிருந்த குசத்தினால் (தர்ப்பை) கங்கையின்
போக்கை மாற்றி, மற்ற முனிவர்களும் தூய்மையடையச் செய்தார் கவுதமர்.
பவித்ர தேசம் என்று அழைக்கப்படும் இந்தத் தல மூர்த்தியைத் தரிசித்தால்
மனமாசுகள் அகன்று ஆன்ம ஒளி சிறக்கும்.
Civayanama
ReplyDeleteThiruchitrapalam...
Delete