Thursday, 28 November 2013

அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில்( 108 திவ்ய தேசங்கள்)

4.அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில்



தல வரலாறு:


ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட் சுமியும் 

பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், ""லட்சுமி உனது கருணையால் 

இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. 

இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய 

வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்'' என்கிறார். அதற்கு லட்சுமி, 

""தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு'' 

என்கிறாள்.இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு 

தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். 

அதற்கு பெருமாள், ""உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. 

இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி 

சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி 

வைக்கிறேன்'' என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் 

ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி 

சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி 

அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. 

படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே 

அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள 

புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் 

போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து 

கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு 

முனிவர்,""நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு 

தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக 

(பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்'' என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி 

அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த 

மகாலட்சுமியிடம்,"" நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல 

அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் 

அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்'' என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் 

அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். 

ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க

உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் 

மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு 

மார்க்கண்டேயர்,""உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி 

திருப்தி பெறுக'' என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 

குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். 

அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே 

இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த 

மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து 

கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் 

செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா 

காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.



தலபெருமை:


108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான் 

அவதாரம் செய்துள்ளார். இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க 

வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர 

வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் 

பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை 

பஞ்சபூதங்களை குறிக்கிறது. பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் 

உள்ளது. முதல் வழி "தட்சிணாயணம்' ஆடி முதல் மார்கழி வரை 

திறந்திருக்கும். இரண்டாவது வழி "உத்தராயணம்' தை முதல் ஆனி வரை 

திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலிபீடத்தின் முன் தங்கள் 

கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொண்டு, நிறைவேறிய பின் "பலிபீட 

திருமஞ்சனம்' செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை 

நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை 

ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு அமுது 

செய்த பொங்கலை சாப்பிட்டால் "புத்ரபாக்கியம்' நிச்சயம் என்பது ஐதீகம். 

இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு 

மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், 

சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.

முகவரி:

அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை-621 009 திருச்சி மாவட்டம்.



No comments:

Post a Comment